  <rss version="2.0"><channel>
	<title>publication_books vikatan |Wed, Nov-2016 | Vikatan.com</title>
	<link>http://www.vikatan.com/</link><image><title>vikatan.com</title><url>http://www.vikatan.com/static/images/vikatan.png</url>
	<link>http://www.vikatan.com/</link><width>150</width><height>40</height><description>Visit vikatan.com</description></image><item>
		<title>ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - நாவலர் ஏ.இளஞ்செழியன்; பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். 
இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும், 
பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன்.
இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். 
மேலும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது.
உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது.]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>நாட்டு வைத்தியம்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - அன்னமேரி பாட்டி; மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும்  வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை.  
நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. 
அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல்.  அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>ஆன்லைனில் A to Z</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - காம்கேர் கே.புவனேஸ்வரி; இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம்  வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன. 
அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டிய இன்றையச் சூழலில் மின் கட்டணம், வீட்டுவரி, வருமானவரி எனத் தொடங்கி எல்லாவிதமான தேவைகளுக்காகவும் அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கி அலைவது முடியாத ஒன்று. அதுபோன்ற அலைக்கழிப்புகளில் இருந்தும், அவஸ்தைகளில் இருந்தும், கால விரயத்தில் இருந்தும் விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளது கம்ப்யூட்டரோடு இணைந்த இன்டர்நெட் எடுத்திருக்கும் ஆன்லைன் அவதாரம். இன்டர்நெட் வசதியோடு கம்ப்யூட்டர் இருந்துவிட்டால் எத்தனையோ வேலைகளை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே முடித்துக்கொள்ளலாம். அதிலும் லேப்டாப்பும் டேட்டா கார்டும் இருந்துவிட்டால், ஆன் தி வே-யில் ஆன்லைனில் அசத்தலாம், அவசியமான பல வேலைகளை அநாயாசமாகச் செய்து முடிக்கலாம். இது மட்டுமல்ல... பலரது வருமானத்துக்கும் வழி தேடிக் கொடுத்துள்ளது ஆன்லைன் சேவை. அத்தகைய ஆன்லைன் சேவைகளின் பன்முகச் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த பல தகவல்களுடன், எளிமையான வார்த்தைகளால் இந்த நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி.
ஆன்லைன்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எளிமையாகக் கையாளும் விதமாக படிப்படியாக விளக்கப் படங்களுடன், அடுத்தடுத்த செயல்முறைகளைத் தெளிவாகக் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு.
எல்லாமே இணையமயமாக மாறிவரும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர், இணையத்தில் ஆன்லைன் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முனைவதும், ‘ஆன்லைன் ஜாப்’ செய்ய விரும்புவதும், அதற்கான தளத்தினைத் தேடி அலைவதும்  ஆச்சர்யம் இல்லை, இது காலத்தின் கட்டாயம். நிச்சயமாக ஒரு சில வருடங்களில் ஏராளமான பணிகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்தான் நடக்க இருக்கின்றன.  
ஆகவே, விரைவில் பெரும்பான்மையான பணிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு உகந்த பணியாக மாறிவிடும். அப்படிப்பட்ட மாற்றத்துக்குத் தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்ளவும், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை புரிதலை நம்முள் ஏற்கவும் இந்த நூல் அற்புதமான வழிகாட்டி! ]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>கடன் A to Z</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - சி.சரவணன்; இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். 
விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக்
கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என 
கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் 
தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. 
வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார்  சி.சரவணன்.
இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!
]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>லவ்வாலஜி</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - எஸ்.கே.முருகன்; மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்!
‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது.
 அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம்,  வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்!
காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.
அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது.]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>மௌனியின் மறுபக்கம்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - ஜே.வி.நாதன்; “மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உண்டாக்கவல்லது என்பது விமர்சகர்கள் கண்டுள்ள உண்மை. பிரும்மத்தைக் கண்டவர்கள் அவசியம் நேர்ந்தால் அதை வேறு வேறு விதமாக வர்ணிப்பதுபோல, மௌனியின் கதைகளைப் படிப்பவர்கள் அதை வேறு வேறு விதமாக வர்ணிக்க இயலும். இதுவும் இது மிகச் சிறந்த இலக்கியம்  என்பதற்கு ஓர் அத்தாட்சியே ஆகும்.” - இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் 1967-ம் ஆண்டு மௌனியின் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட வரிகள் இவை.
24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடம் பிடித்திருப்பவர் ‘சிறுகதைத் திருமூலர்’ மௌனி ஒருவர் மட்டுமே. சிறுகதைகளைத் தவிர, ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘எங்கள் ஊர் செம்மங்குடி’ என்று ஒரு கட்டுரையும், பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் ‘எனக்குப் பெயர் கொடுத்தவர்!’ என்று ஒரு கட்டுரையும் மட்டுமே மௌனி எழுதி உலகுக்கு அறிமுகமாகியுள்ளவை. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு குறுநாவல் காணாமற் போய்விட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே, மௌனியின் எழுத்து இலக்கிய உலகில் தனித்துவமானதும் புதுத் தடம் போட்டுக்கொண்டு போனதும் ஆகும். அவரைப்பற்றிய அனுபவ உண்மைகளும் அவ்வாறே. இலக்கிய ரசிகர்கள் மற்ற எழுத்தாளர்களைப்பற்றி அறிந்த அளவுக்கு மௌனியை அறிந்துகொள்ள இயலவில்லை. 
அவரோடு சுமார் 16 வருடங்கள் பழகிய எழுத்தாளர் ஜே.வி.நாதன் இந்த நூலின் மூலம் மௌனியின் மறு பக்கத்தை அனுபவபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்.ஜே.வி.நாதனின் எழுத்து நடையில் மௌனியின் பேட்டியைப் படிக்கிறபோது சிலிர்க்கிறது மனது. மௌனியின் ‘தவறு’, ‘அத்துவான வெளி’ ஆகிய சிறுகதைகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மொழி வளர்ச்சி இயலாளரான 
திரு.ஆல்பர்ட் பி. ஃபிராங்க்ளின் அளித்துள்ள ஆங்கில விமர்சனம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்கள், அவரின் கையெழுத்து ஆகியவை வாசகர்களுக்கு அபூர்வ பொக்கிஷமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>உள்ளதைச் சொல்கிறேன்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - மதுரை தங்கம்; சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பேட்டி எடுத்த பத்திரிகையாளர். அவருடைய திரைத் துறை அனுபவத் தொகுப்பே இந்த நூல். 
முதன்முதலில் மதுரை தங்கத்தைச் சந்தித்தபோது, கம்பீரம் குலையாத ஒரு பத்திரிகையாளர் எப்படி இருப்பார் என்பதற்கான உதாரணமாக இருந்தார். பேச்சினூடாக அவர் பகிர்ந்துகொண்ட அத்தனை சம்பவங்களுமே சுவாரஸ்யம் மிக்கவை. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பை அவரை அணுகிய ஒவ்வொரு சந்திப்பிலும் உணர்ந்தவன் நான். இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி நாகேஷ், ரஜினி, கமல் என திரையுலகின் உயரிய தகையாளர்களைப்பற்றி மதுரை தங்கம் விவரிக்கும் விதம் அலாதியானது; யாரும் அறிந்திராத அபூர்வமானது. 
நமக்கு மிகத் தெரிந்தவர்களைப்பற்றிய புத்தகம்தான்; ஆனால், மொத்தமாக இதனை வாசித்து முடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான மரியாதை வெகுவாக உயர்கிறது. கே.பி. சாரின் பகிர்வு, ரஜினியின் பணிவு, கமலின் கூர்மை, இளையராஜாவின் எளிமை, வைரமுத்துவின் நட்பு, பாக்யராஜின் உறுதி என ஒவ்வொரு பிரபலத்தைப்பற்றிய செய்திகளும் இதுவரை கேள்விப்படாதவை. அந்த விதத்தில் சுவாரஸ்யச் செய்திகளின் சுரங்கம் இந்தப் புத்தகம்.]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>சினிமா</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - செல்லா; ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்கிற வேறுபாடு மட்டும்தான்.
செல்லா... இதில் இரண்டாவது வகைக்காரர். அதனாலேயே வென்றவர்களின் சாகசச் சூத்திரத்தை அவர்களின் வார்த்தைகளின் வழியே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், வாய்ப்புக்காகப் போராடி, கிடைத்த வாய்ப்பை சரிவரப் பற்றிக்கொண்டு, தான் நேசித்த துறையில் வெற்றியடைந்த சினிமா சாதனையாளர்களின் அனுபவத் தொகுப்புதான் இந்தப் புத்தகம். கதை முதல் போஸ்டர் வரை படிப்படியாக உருவாகி கடைக்கோடி ரசிகன் வரை சென்று சேரும் சினிமாவின்  அத்தனைத் தடங்களையும் அடையாளப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு.  
இன்றைய சினிமா குறித்தும் வெற்றிக்கான போராட்டங்கள் குறித்தும் செல்லாவிடம் சில மணி நேரங்கள் பேசிய பிறகு நான் சொன்ன வார்த்தைகள் இவைதான்... ‘‘இப்போது நீங்கள் சொன்ன விஷயங்களை வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களோடு தொகுத்து எழுதினால், நிச்சயம் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும்!’’
இதோ கைகளில் தவழ்கிறது அந்த நல்ல புத்தகம். 
வெற்றியாளர்களின் அனுபவ முத்துக்கள் நிறைந்த இந்தப் புத்தகம், வெற்றிக்காகப் போராடும் அனைவருக்கும் நம்பிக்கையான விடிவெள்ளி! 
சினிமாவின் அத்தனை துறை சாதனையாளர்களின் அனுபவங்களையும் அறிவுரைகளையும் ஒருசேரச் சொல்லும் இந்தப் புத்தகம், வெற்றிக்காகப் போராடும் அத்தனை பேரின் நரம்புகளிலும் நம்பிக்கைப் பூக்கவைக்கும்!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>என்ன அழகு... எத்தனை அழகு!</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - வீணா குமாரவேல்; இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்பை மட்டும் அல்லாது தன்னம்பிக்கை, 
பெருமை, தெளிவு என அழகு நமக்குக் கொடுக்கும் அபரிமிதமான ஆற்றல்கள் அதிகம்.
மேக்கப் என்பது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள், வசதிபடைத்த மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை இப்போது மாறிவிட்டது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள மேக்கப் கலையை நாடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெருநகரங்களில் அழகு நிலையங்கள் பல்கிப் பெருகி உள்ளன.
இமை, விழி, புருவம், நெற்றி, உதடு, கன்னம், கழுத்து, 
காது, மூக்கு, முகம், முதுகு, மேனி, விரல்கள், நகங்கள், சருமம், கூந்தல் என அத்தனை உறுப்புகளும் அழகு பெற நூலாசிரியர் வீணா குமாரவேல் சொல்லும் வழிமுறைகள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. மேலும், நம் நிறத்துக்கு ஏற்றபடி உடை அலங்காரம், அணிகலன்கள், கையில் எடுத்துச் செல்லும் பை என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே கற்றுத் தருகிறார் வீணா குமாரவேல்.
அழகுக்கு அணி சேர்க்கும் எக்கச்சக்கக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் இருக்க வேண்டிய ஒன்று. ]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>லாபம் தரும் வேளாண் வழிகாட்டி</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=4#rss</link>
		<description><![CDATA[Author - பொன். செந்தில்குமார்; நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்!  விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது.  
அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி!’
எந்தெந்தப் பயிர்களுக்குக் கடன் தரப்படுகிறது, எவ்வளவு மானியம் தரப்படுகிறது, எந்த வங்கியை அணுக வேண்டும், யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும்... என்பன போன்ற அனைத்துத் தகவல்களையும் ஒன்றுவிடாமல் சேகரித்து எழுதி இருக்கிறார் பொன்.செந்தில்குமார்.
ஊருக்கெல்லாம் சோறுபோடும் விவசாயிகளுக்கு, அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அலைச்சலை மிச்சப்படுத்தி, மேன்மேலும் விவசாயத் தொழிலில் மேன்மை அடைய இந்த நூல் நிச்சயம் துணைபுரியும்! ]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item></channel></rss>